உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் 15 பெண்கள் உள்பட 55 பேர் கைது
உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 15 பெண்கள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,
மாற்றுத்திறனாளிகளின் உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளிகள் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு மணிக்கூண்டு அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக நேற்று அதன் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் பஸ் நிலையம் அருகே காந்திஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
55 பேர் கைது
மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 55 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.