மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கலெக்டர் லலிதா திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை கலெக்டர் லலிதா திறந்து வைத்தார்.

Update: 2021-02-26 17:07 GMT
மயிலாடுதுறை, 

தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 24-ந் தேதி நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனை தொடர்ந்து மாவட்ட உருவாக்க தனி அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரியான லலிதா நியமனம் செய்யப்பட்டு, ஜூலை 15-ந் தேதி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டு பணியை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 28-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்தார். அன்றைய தினமே மயிலாடுதுறை மாவட்ட கலெக்டராக லலிதா பதவி ஏற்றுக் கொண்டார்.

புதிய கலெக்டர் அலுவலகம்

தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் இயங்கியது. இதற்கிடையில் மயிலாடுதுறை மாயூரநாதர் தெற்கு வீதியில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் இயங்குவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணி நடந்து வந்தது.

வணிக வரித்துறை அலுவலகம் சித்தர்காடு அண்ணா திருமண மண்டபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டன. வணிகவரித்துறை அலுவலகத்தில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று முதல் அந்த அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கலெக்டர் லலிதா திறந்து வைத்தார்

இதனையடுத்து நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கி, கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா, நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், வணிகவரித்துறை அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலகமாக மாற்றப்பட்டு விட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் தொடர்ந்து இங்கேயே செயல்படும் என்றார்.

மேலும் செய்திகள்