துபாயில் இருந்து சென்னைக்கு மின்விசிறியில் மறைத்து கடத்தி வந்த ரூ.18½ லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிறிய அளவிலான மின்விசிறி மற்றும் ஆவி பிடிக்கும் கருவிக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.18 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள 390 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-02-27 13:38 GMT
துபாய் விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நசீப் (வயது 21) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

ரூ.18½ லட்சம் தங்கம்
அதில் சிறிய வகை மின்விசிறி மற்றும் ஆவி பிடிக்கும் கருவி இருந்தது. ஆனால் அவை வழக்கத்தைவிட அதிக எடைகொண்டதாக இருந்ததால் சந்தேகத்தின்பேரில் அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் தங்கத்தகடுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள 390 கிராம் எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கஇலாகா அதிகாரிகள், இது தொடர்பாக முகமது நசீப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்