கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாடியில் இருந்து விழுந்த டாஸ்மாக் பார் உரிமையாளர் சாவு

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து விழுந்த டாஸ்மாக் பார் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-02-28 17:48 GMT
கரூர்
டாஸ்மாக் பார் உரிமையாளர்
கரூர் நீலிமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் என்ற சின்ன ஜசான் (வயது 44). இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் பார் நடத்தி வந்தார். இந்நிலையில் சரவணக்குமார் மதுவுக்கு அடிமையானதாக தெரிகிறது. கடந்த ஒரு வாரமாக சின்னஜசான் மது குடிப்பதை நிறுத்திவிட்டார். இதனிடையே சரவணக்குமாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த 26-ந்தேதி கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3-வது மாடியில் உள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 
3-வது மாடியில் இருந்து விழுந்து சாவு
இந்தநிலையில் நேற்று அதிகாலை திடீரென சரவணக்குமார் மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் சரவணக்குமாரை மீட்டு பரிசோதனை செய்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 
பின்னர் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்