கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி

கொரோனாவுக்கு முதியவர் பலி

Update: 2021-02-28 21:06 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 9 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இவர்களில் அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரை சேர்ந்த நோயாளி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 817 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று ஒரே நாளில் 6 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை 287 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.
இதன் விவரம் வருமாறு:-

பலி

கடலூரை சேர்ந்த 67 வயது முதியவர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா பாதித்த 35 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 17 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 189 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்