பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வேலைக்கு செல்லவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-03 06:03 GMT
மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி, இவரது மகன் ரமேஷ் (வயது 19). இவர் அங்குள்ள ஒரு கல் சிற்ப கூடத்தில் தினக்கூலி அடிப்படையில் சிற்பியாக வேலை செய்து வந்தார். வேலைக்கு செல்லாமல் இவர் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை இவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ரமேஷ் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி மாயமாகி விட்டார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் ரமேஷ் கிடைக்கவில்லை. மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

அழுகிய தலை பகுதி

இந்த நிலையில் நேற்று முன்தினம் கடம்பாடி காட்டில் விறகு பொறுக்க சென்ற சிலர் அங்கு மரத்தில் உடல் பகுதி அழுகி கீழே விழுந்தும், அழுகிய தலை பகுதி மரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இனஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அழுகிய உடல் பகுதி மற்றும் தலை பகுதியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பெற்றோர் கண்டித்ததால் ரமேஷ் தூக்குப்போட்டு தற்றொலை செய்து கொண்டார் என்றும், அவரது உடலை விலங்குகள் கடித்து குதறி உள்ளதால் தலை மற்றும் உடல் பகுதி தனித்தனியாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்