உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

சென்னை தரமணி அசென்டாஸ் சாலையில் உலக வங்கி உள்ளது. இந்த வங்கியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியான சரத் சந்தர், தரமணி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்.

Update: 2021-03-04 02:28 GMT
கைதான அந்தோணி
அதில், உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக சிலர் நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றுவதாக ஒரு பெண் இ-மெயில் மூலம் புகார் தெரிவித்தார். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய பெண்ணிடம் தரமணி போலீசாரும், அடையாறு சைபர் கிரைம் போலீசாரும் இணைந்து விசாரித்தனர். அப்போது அந்த பெண், உலக வங்கியில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் தன்னை நிராகரித்த பிறகு அதே வங்கியில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்றபோது வங்கி தொடர்பான கேள்விகள் கேட்காமல் உடை, உருவம் பற்றி அநாகரீகமாக கேள்வி கேட்டதால் சந்தேகத்தில் புகார் செய்ததாக கூறினார்.

இது தொடர்பாக ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த அந்தோணி (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், உலக வங்கி அருகில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், பலரிடம் தான் உலக வங்கியில் வேலை செய்வதாகவும், அதே வங்கியில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடி செய்தது தெரிந்தது. பின்னர் அந்தோணியை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்