ராயப்பேட்டையில் பயங்கரம்; மூதாட்டி கற்பழித்து கொலை-நகை கொள்ளை; இளம்பெண் என்று நினைத்து, வெறியாட்டம் நடத்திய கஞ்சா வாலிபர் கைது

சென்னை ராயப்பேட்டையில் 75 வயது மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இளம்பெண் என்று தப்பாக நினைத்து வெறியாட்டம் நடத்திய கஞ்சா வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-03-05 04:55 GMT
வசந்தகுமார்
75 வயது மூதாட்டி
சென்னை ராயப்பேட்டை ரோட்டரி நகர் பகுதியில் 75 வயது மூதாட்டி வசித்து வந்தார். திருமணம் ஆகாத அவர், குடும்பத்தினர் யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார். நேற்று காலையில் இவர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் தலையில் தாக்கப்பட்ட பலத்த காயம் இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் ராயப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் லட்சுமணன் போலீஸ் படையுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கற்பழித்து கொலை
மூதாட்டி அணிந்திருந்த நகைகளை காணவில்லை. எனவே அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், கஞ்சா போதைக்கு அடிமையான நபர் யாராவது இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் கொண்டனர். இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மூதாட்டி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் அணிந்திருந்த நகை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதும் உறுதியானது.

கஞ்சா வாலிபர் கைது
இந்த படுபாதக செயலில் ஈடுபட்டது, சென்னை நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (21) என்று தெரியவந்தது. அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர் கஞ்சா போதையில் மூதாட்டி வசித்த வீட்டு பக்கம் சென்றதாகவும், அவரை இளம்பெண் என்று நினைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் கூச்சல் போட்டதால், அவரது தலையை தரையில் மோத வைத்து தாக்கியதாகவும், அவர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தவுடன், அவர் அணி ந்திருந்த நகையை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச்சென்றதாகவும், வசந்தகுமார் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.தொடர்ந்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இது பற்றி உறுதியாக கூற முடியும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்