திருமணமாகாத விரக்தியில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-05 14:30 GMT
கொல்லங்கோடு:
திருமணமாகாத விரக்தியில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வார்டு உறுப்பினர்
கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவர் சூழால் பஞ்சாயத்து 1-வது வார்டு உறுப்பினராக இருந்தார். தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்த இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை. 
தாயுடன் வசித்து வந்த ராஜேசுக்கு 2 தங்கைகள் உள்ளனர். 2 தங்கைகளுக்கும் ராஜேஷ் திருமணம் முடித்து வைத்தார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேஷ், தனது தாய் தூங்கிய பின்பு வீட்டின் அருகில் உள்ள மரத்தில் கயிறை கட்டி  தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார். 
நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் மரத்தில் ராஜேஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 
உடனே இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
திருமணமாகாத விரக்தியில்...
மேலும் தற்கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜேஷ் திருமணமாகாத விரக்தியில் இருந்து வந்ததாகவும், இதற்கு முன்பு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றி உள்ளதாகவும், இந்தநிலையில் இரவு நேரத்தில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்