பள்ளிபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி பள்ளி மாணவர் பலியானார்.

பள்ளிபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி பள்ளி மாணவர் பலி

Update: 2021-03-05 17:57 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி பள்ளி மாணவர் பலியானார்.
பள்ளி மாணவர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை சவுதாபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 35). தறித்தொழிலாளி. இவருடைய மகன் சந்தோஷ் குமார் (16). இவர் வெப்படை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 
இவர் நேற்று காலை தனது நண்பரான வசந்த் என்பவருடன் சைக்கிளை தள்ளி கொண்டு வெப்படையில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சங்ககிரியில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக சந்தோஷ்குமார் மீது மோதியது.
வழக்குப்பதிவு
இதில் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மாணவர் சந்தோஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வெப்படை போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த    ஈரோட்டை சேர்ந்த காவலாளி வேலை செய்யும் கார்த்தி (31) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள் மோதி பள்ளி மாணவர் பலியான சம்பவம் வெப்படை சவுதாபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
======

மேலும் செய்திகள்