மோட்டார் சைக்கிளில் சென்றவர், லாரி மோதி பலி

மோட்டார் சைக்கிளில் சென்றவர், லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-03-05 20:50 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது 40). இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனத்தை வாடகைக்கு எடுத்து கமிஷனுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வந்தார். ராஜா நேற்று முன்தினம் வேப்பூருக்கு சென்று ஆழ்துளை கிணறு அமைக்க இடம் பார்த்து விட்டு, இரவில் மீண்டும் ஊருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர்- துறையூர் புறவழிச்சாலையில் வடக்கு மாதவி பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த ராட்சத லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பெரம்பலூர் போலீசார், ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை தாலுகா கோட்டமங்கலத்தை சேர்ந்த தர்மராஜிடம் விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் உயிரிழந்த ராஜாவுக்கு, ராஜலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்