அம்மாபேட்டை அருகே பாலமலை வனப்பகுதியில் தண்ணீர் தேடி அலையும் குரங்குகள்

அம்மாபேட்டை அருகே பாலமலை வனப்பகுதியில் குரங்குகள் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-03-12 20:47 GMT
அம்மாபேட்டை அருகே பாலமலை வனப்பகுதியில் குரங்குகள் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது. 
பாலமலை வனப்பகுதி
அம்மாபேட்டை அருகே உள்ளது பாலமலை வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றிகள், குரங்குகள் போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. 
இங்குள்ள விலங்குகளுக்கு வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் சிறிய தாவரங்கள் தான் உணவாக உள்ளன. மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீரை குடித்து தாகம் தீர்த்து கொள்கின்றன. 
வறட்சி
போதிய மழை இல்லாததால் பாலமலை வனப்பகுதி வறட்சியாக காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டுவிட்டன. எனவே வனவிலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றன.  இதன்காரணமாக வனப்பகுதியில் உள்ள குரங்குகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள வயல் பகுதி மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன.
தண்ணீர் தேடி...
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘வனப்பகுதி வறண்டு காணப்படுவதால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. குறிப்பாக குரங்குகள் தோட்டங்களுக்குள் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களில் ஏறி தேங்காய் மற்றும் இளநீரை பறித்து தின்று அட்டகாசம் செய்கின்றன. பாலமலை வனப்பகுதி இருப்பது ஈரோடு மாவட்ட எல்லை என்றாலும், அந்த வனப்பகுதி மேட்டூர் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் வனவிலங்குகளின் உயிரை காக்க வனப்பகுதியில் ஆங்காங்கே உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்பி வனவிலங்குகளை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

மேலும் செய்திகள்