கள்ளக்குறிச்சி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை தம்பி மகன் கைது

கள்ளக்குறிச்சி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை தம்பி மகன் கைது

Update: 2021-03-13 16:46 GMT
கள்ளக்குறிச்சி

விவசாயி

கள்ளக்குறிச்சி அருகே கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் சண்முகம்(வயது 58). விவசாயி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் வெளிநாட்டிலும், 2 பேர் கேரளாவிலும் கூலி வேலை செய்து வருகின்றனர்.  சண்முகத்துக்கும் இவருடைய தம்பி பழனிவேல் (44) என்பவருக்கும் நில பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

அடித்துக்கொலை

அப்போது ஆத்திரம் அடைந்த பழனிவேல் மற்றும் இவருடைய மனைவி செல்வி(37), மகன் தேவேந்திரன்(21) ஆகியோர் ஒன்று  சேர்ந்து சண்முகத்தின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் சண்முகம், அவருடைய மனைவி தனலட்சுமி ஆகியோரை தடியால் தாக்கினார்கள்.  இதில் தலையில் படுகாயம் அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தனலட்சுமியை அக்கம் பக்கத்தினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கைது

இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் அறிந்து வந்த வரஞ்சரம் போலீசார் கொலை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் இறந்து கிடந்த சண்முகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சண்முகத்தின் மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பழனிவேல், இவரது மனைவி செல்வி, மகன் தேவேந்திரன் ஆகிய 3 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து தேவேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்