திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

குமாரபுரம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-22 19:53 GMT
பத்மநாபபுரம், 
குமாரபுரம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 
வாலிபர்
குமாரபுரம் தீபாஞ்சான்விளை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வின்குமார் (வயது 29), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், செல்வின் குமாரை அவருடைய தந்தை கண்டித்து வந்தார். 
மேலும், செல்வின்குமார், தனக்கு திருமணம் ஆகாததால் கடந்த சில மாதங்களாக வீட்டில் யாரிடமும் சரியாக போசாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
தீக்குளித்தார்
சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்த செல்வின்குமார் திடீரென அங்கிருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த குடும்பத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
சாவு
பின்னர், மேல்சிகிச்சைக்காக அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வின்குமார் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செல்வின்குமாரின் தங்கை சுஜிகுமாரி கொடுத்த புகாரின் பேரில் கொற்றிகோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமண ஏக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்