அதிகாரிகளிடம் நிர்வாகி வாக்குவாதம்
திருப்பூரில் காரில் கட்சி கொடியை அகற்றுமாறு கூறிய பறக்கும்படை அதிகாரிகளிடம் அ.தி.மு.க. நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் காரில் கட்சி கொடியை அகற்றுமாறு கூறிய பறக்கும்படை அதிகாரிகளிடம் அதிமுக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாகன சோதனை
திருப்பூர்அவினாசி ரோடு தண்ணீர்பந்தல் காலனியில் தேர்தல் அதிகாரி மாரியப்பன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராமு உள்ளிட்ட பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு காரில் அதிமுக. கட்சி கொடியை கட்டியவாறு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் கண்ணப்பன் அ.தி.மு.க. கட்சி கொடியுடன் வந்தார். அப்போது பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறி சோதனை நடத்தினார்கள்.
இதையடுத்து பணியில் இருந்த லீஸ்காரர் காரின் பின்பக்க கதவை திறந்து விடுமாறு சைகையில் கூறியதாக தெரிகிறது. ஆனால் போலீஸ்காரர் மரியாதைக்குறைவாக பேசுவதாக கூறி கண்ணப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் காரில் உள்ள கட்சி கொடியை அகற்ற வேண்டும் என்று கண்ணப்பனிடம் தேர்தல் அதிகாரி கூறினார்.
பரபரப்பு
ஆனால் கொடியை அகற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாததால் கொடியை அகற்ற முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் கொடியை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கொடியை அகற்ற முடியவில்லை. இதையடுத்து கார் எண்ணை குறித்துக் கொண்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.