மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

ஏர்வாடி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-03-24 20:04 GMT
ஏர்வாடி, மார்ச்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர் தேவா (வயது 26). இவர் நெல் அறுவடை செய்யும் எந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி பேச்சியம்மாளுடன் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் திருப்பாற்கடல் வீட்டிற்கு கோவில் திருவிழாவிற்காக வந்தனர். அன்று இரவில் தேவா வள்ளியூரில் தனது உறவினர்கள் வழி தெரியாமல் நிற்பதால், அவர்களை அழைத்து வர செல்வதாக கூறி விட்டு மோட்டார்சைக்கிளில் சென்றார். ஆனால் அவர் தேடி சென்ற உறவினர்கள் லெவிஞ்சிபுரத்திற்கு வந்த பின்னரும் தேவா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் மறுநாள் காலை திருக்குறுங்குடி அருகே உள்ள கல்லமடை பாலம் அருகே ரோட்டோரமுள்ள புளியமரத்தில் மோட்டார்சைக்கிள் மோதியதில் தேவா இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் திருக்குறுங்குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் அய்யப்பன், திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான தேவாவிற்கு 1 ஆண் குழந்தை உள்ளது.

மேலும் செய்திகள்