திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
பூந்தமல்லி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 30). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பவானி (21) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
பின்னர் கணவன்-மனைவி இருவரும் சென்னை நெற்குன்றம் 4-வது தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் பவானி திடீரென தனக்கு வாந்தி வருவதாகவும், வயிறு வலிப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.
இதனால் திருமுருகன், ஜூஸ் வாங்கி வருவதாக கூறி கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது மனைவி பவானி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், தூக்கில் தொங்கிய பவானி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பவானியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பவானிக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.