துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தாய்-மகன் கார் மோதி பலி

தென்னிலை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தாய்-மகன் கார் மோதி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-03-28 19:08 GMT
க.பரமத்தி
கார் மோதல்
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கருநல்லிவலசை சேர்ந்தவர் நல்லசிவம் (வயது 60). விவசாயி. இவரது தாய் ஆச்சியாத்தாள் (85). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று காலை துக்க நிகழ்ச்சிக்காக தென்னிலை அருகே உள்ள டி.நல்லிபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். 
டி.நல்லிபாளையம் பிரிவு அருகே கரூர்-கோவை சாலையை மோட்டார் சைக்கிள் கடந்தபோது கோவையில் இருந்து கிழக்கு நோக்கி வந்த கார் ஒன்று நல்லசிவம், ஆச்சியாத்தாள் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தாயும், மகனும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
தாய்-மகன் பலி
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆச்சியாத்தாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லசிவம் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சாலை விபத்தில் தாயும், மகனும் இறந்த சம்பவத்தால் கருநல்லிவலசு கிராமம் சோகத்தில் மூழ்கியது.

மேலும் செய்திகள்