படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை விராலிமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் வாக்குறுதி

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விராலிமலை தொகுதி தி.மு.க.வேட்பாளர் பழனியப்பன் வாக்குறுதி அளித்துள்ளார்.

Update: 2021-03-31 03:20 GMT
ஆவூர், 

விராலிமலை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தென்னலூர் எம்.பழனியப்பன் நேற்று தென்னத்திரையன்பட்டி, லெட்சுமணன்பட்டி, தொண்டைமான்நல்லூர், களமாவூர், நடுப்பட்டி, நீர்பழனி, வெம்மணி, ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய, மாநில அரசால் தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பெரும்பாலான குடும்பங்களில் படித்த இளைஞர் மற்றும் பெண்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், சமையலர், ரேஷன் கடை ஊழியர் உள்ளிட்ட பல்வேறு நேரடி நியமன பணி கேட்டு சென்றால் ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என்று லஞ்சம் கொடுத்து வேலையில் அமர வேண்டிய கொடூர ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இந்த கொடுமைகள் அகற்றப்படும். 

இது போன்ற வேலைகளுக்கு ஏழைகளிடம் ஒரு பைசாகூட வாங்காமல் பணி அமர்த்தப்படுவார்கள். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எங்களிடம் உதவி கேட்டு வருபவர்களிடம் சாதி, மத கட்சிப் பாகுபாடின்றி அனைவருக்கும் உதவி செய்வோம். 

இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின் போது, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சத்தியசீலன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சவரிநாதன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்