திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு

திருவள்ளூர் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்தடையை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-01 01:13 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த பூண்டி பள்ளத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் உமாபதி (வயது 48). இவர் பூண்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பூண்டி மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உமாபதி உடன் பணிபுரியும் சக பணியாளரான ஏழுமலை என்பவருடன் ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு சென்றார்.

அங்கு டிரான்ஸ்பார்மர் மீது உமாபதி ஏறி மின்தடையை சரி செய்து கொண்டிருக்கும் போது அவர் மின் இணைப்பு உள்ள கம்பி மீது தவறுதலாக கை வைத்தார்.

சாவு

இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் டிரான்ஸ்பார்மரில் தொங்கி கொண்டிருந்தது. இதை பார்த்த ஏழுமலை கூச்சலிட்டார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், சிவா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உமாபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்