தங்க கவசத்தில் முத்துமாரியம்மன் உலா

தாயமங்கலம் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி தங்க கவசத்தில் முத்துமாரியம்மன் திருவீதி உலா வந்தார்.

Update: 2021-04-01 18:12 GMT
இளையான்குடி,

தாயமங்கலம் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி தங்க கவசத்தில் முத்துமாரியம்மன் திருவீதி உலா வந்தார். "

தாயமங்கலம் கோவில்

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 23-ந்தேதி இரவு காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து பொங்கல் வைபவம் மற்றும் மின்னொளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 9-ம் திருநாளான நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், அங்கப்பிரதட்சணம், அலகு குத்துதல், கரும்பு தொட்டில் சுமந்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தங்க கவசம்

பின்னர் தங்க கவசத்தில் எழுந்தருளிய முத்துமாரியம்மன் பக்தர்கள் வெள்ளத்தில் திருவீதி உலா வந்தார். 10-ம் திருநாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தாயமங்கலம் கோவில் விழாவையொட்டி மதுரை, சிவகங்கை, காரைக்குடி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

மேலும் செய்திகள்