விலைவாசி உயர்வு, நீட் போன்றவைகளால் பாதிப்பு: இந்த முறை எனக்கு வாய்ப்பு தாருங்கள் தி.மு.க. கூட்டணி ம.ம.க. வேட்பாளர் அப்துல்சமது பிரசாரம்

விலைவாசி உயர்வு, நீட் போன்றவைகளால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இந்த முறை எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று மணப்பாறை தொகுதி தி.மு.க. கூட்டணி ம.ம.க. வேட்பாளர் அப்துல்சமது பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2021-04-02 05:59 GMT
மணப்பாறை, 

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் சமது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று வையம்பட்டி ஒன்றியத்தில் உதயசூரியனுக்கு வாக்களித்திட கேட்டு பிரசாரம் மேற்கொண்டபோது அவர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு உச்சத்தை தொட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலையும் கடுமையாக உள்ளது. இதுமட்டுமல்ல அனைத்து அத்யாவசிய பொருட்களுமே விலை உயர்ந்துள்ளது. இதுஒருபுறம் இருக்க, மருத்துவபடிப்பிற்கு நீட் தேர்வால் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிமேல், நர்சிங், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு வந்து விடும். இதனால் ஏழ்மை நிலையில் வாழும் மாணவ, மாணவிகளின் கல்விக் கனவு தகர்ந்து போக வாய்ப்புள்ளது. மத்திய அரசுக்கு, தமிழக அரசும் துணை போகிறது. தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி தான் மகத்தான வெற்றியை பெறும். ஆகவே, மணப்பாறை தொகுதியில் இந்தமுறை எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி வாய்ப்பை தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்