மீனவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு

மீனவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது-மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பேச்சு

Update: 2021-04-03 17:15 GMT
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் குப்புராமை ஆதரித்து மத்திய மீன்துறை மற்றும் வேளாண்மை துறை மந்திரி கிரிராஜ் சிங் நேற்று பாம்பன் மீனவ பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, மீனவர்கள் மீது அதிக பற்றுடையவர் பிரதமர் மோடி. மீனவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற 40 மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்டு மத்திய அரசு கொண்டு வந்தது. நாட்டுப்படகுகளுக்கு பயோ டாய்லெட் வசதி கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இலவச ஜி.பி.எஸ். கருவி வழங்கப்பட உள்ளது. மீனவ பெண்களுக்கு கடல்பாசி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருக பல திட்டங்கள் கொண்டு வரப்படும். எனவே இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் குப்புராமை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார். அப்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முன்னதாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் அங்குள்ள கூனி மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்