காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

இளையான்குடியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-03 17:38 GMT
இளையான்குடி,

இளையான்குடி ஆரிப்நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 6 மாத காலமாக காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என தெரிகிறது. புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் இணைப்பு கொடுப்பதில் காலதாமதம் ஆனதாக தெரிகிறது.
 இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் ஒன்று திரண்டு இளையான்குடி-காரைக்குடி செல்லும் சாலையில் காலிக்குடங்களை வரிசையாக அடுக்கி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் புதிய இணைப்பு தேர்தல்முடிந்த பிறகு தான் வழங்கப்படும் என பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். பொதுக்குழாயில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்