அந்தியூர் அருகே நடுரோட்டில் நின்று வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை

அந்தியூர் அருகே நடுரோட்டில் நின்று வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-04-05 23:32 GMT
அந்தியூர்
அந்தியூரில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில் தாமரைக்கரை வழியாக தாளக்கரைக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் துரைசாமி ஓட்டினார். கண்டக்டராக குணசேகரன் என்பவர் இருந்தார். பஸ்சில் சுமார் 30 பயணிகள் இருந்தனர்.
காலை 9 மணி அளவில் தாளக்கரை அருகே உள்ள பாலக்கரை பிரிவு அருகே சென்றபோது நடுரோட்டில் ஒற்றை யானை நின்று கொண்டிருந்ததை பார்த்தனர். இதனால் டிரைவர் பயந்து பஸ்சை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டார். பஸ்சில் இருந்த பயணிகள் தங்கள் செல்போன்களில் யானையை புகைப்படம் எடுத்தனர்.
யானை ரோட்டோரம் சென்று துதிக்கையால் மூங்கில்களை முறித்து தின்பதும், பின்னர் நடுரோட்டுக்கு வந்து நிற்பதுமாக இருந்தது. இவ்வாறு சுமார் ½ மணி நேரம் யானை ரோட்டில் அங்கும் இங்குமாக நடமாடியது. அதைத்தொடர்ந்து தானாகவே யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே பஸ் அங்கிருந்து புறப்பட்டது. இதனால் அந்த ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்