திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை - மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பரிதாபம்

திருமணத்துக்கு பெண் பார்த்துவிட்டு மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2021-04-06 13:10 GMT
ஆவடி,

ஆவடி லாசர் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் டில்லி. இவருடைய மகள் நிவேதா (வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை நிவேதாவை பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். நிவேதாவை பார்த்துவிட்டு மாப்பிள்ளை வீட்டார் இரவு 7 மணியளவில் திரும்பிச் சென்று விட்டனர்.

அதன்பிறகு படுக்கை அறைக்குள் சென்ற நிவேதா, கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு நிவேதா, படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார், தூக்கில் தொங்கிய நிவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணத்தில் நிவேதாவுக்கு விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெற்றோர் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்