மின்கம்பத்தின் மீது ஸ்கூட்டர் மோதியது; கணவன்- மனைவி பரிதாப சாவு

பெருந்துறை அருகே மின்கம்பத்தின் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற கணவன், மனைவி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-04-07 00:29 GMT
பெருந்துறை
பெருந்துறை அருகே மின்கம்பத்தின் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற கணவன், மனைவி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். 
மின்கம்பத்தில் மோதியது
பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 70). விவசாயி. இவருடைய மனைவி சாந்தாமணி (60). இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். 4 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சின்னச்சாமியும், சாந்தாமணியும் காஞ்சிக்கோவில் அருகே உள்ள செல்லப்பக்கவுண்டன்வலசுக்கு சென்றுவிட்டு மீண்டும் கருமாண்டிசெல்லிபாளையத்துக்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர்.  காஞ்சிக்கோவில்- பெருந்துறை ரோடு பிரிவு அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மின்கம்பத்தின் மீது ஸ்கூட்டர் மோதியது. 
சாவு
இந்த விபத்தில் சின்னச்சாமி, சாந்தாமணி ஆகியோர் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 
இதுபற்றி அறிந்ததும் காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சின்னச்சாமி, சாந்தாமணி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்