காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்

காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்தான். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-07 00:49 GMT
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் நேற்று முன்தினம்  சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் மின்சார கம்பி அறுந்து அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் விழுந்தது. இது குறித்து கிராமமக்கள் காவேரிப்பட்டணம் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நேற்று தேர்தல் என்பதால் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சீரமைக்க வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை கோவிலூரை சேர்ந்த பெரியசாமி மகன் முகிலன் (வயது 7) என்ற சிறுவன் தோட்டத்திற்கு சென்றான். அப்போது மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தான். இதனால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் சிறுவன் உயிர் இழக்க நேர்ந்ததாக கூறி கிராம மக்கள் நேற்று இரவு தளிஅள்ளி கூட்டு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு முடிந்து எந்திரங்களை எடுத்து சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அந்த பகுதியிலேயே நின்றன.
இது குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்