மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் சாவு

குளச்சல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீனவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-07 19:43 GMT
குளச்சல், 
குளச்சல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீனவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
மீனவர்
குளச்சல் அருகே குறும்பனை பகுதியை சேர்ந்த ஜோசப் லிதின் மகன் விஜூமோன் (வயது 38) மீனவர். இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் குளச்சல் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
சைமன் காலனி பாலத்தை கடந்து செல்லும்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
சாவு
அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விஜூமோன் ஏற்கனவே இறந்து விட்டதாக  கூறினார்கள்.
இதுபற்றி அவருடைய அண்ணன் வினோ குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான விஜூமோனுக்கு ஜெஸி என்ற மனைவி இருக்கிறார். அவர் 6 மாத கர்ப்பிணியாவார். இந்த விபத்து குறும்பனையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்