ஈரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்: மனைவிக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு வாக்களித்த முதியவர்

மனைவிக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு முதியவர் ஒருவர் ஓட்டுப்போட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஈரோட்டில் நடந்தது.

Update: 2021-04-07 20:33 GMT
மனைவிக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு முதியவர் ஒருவர் ஓட்டுப்போட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஈரோட்டில் நடந்தது.
சாவு
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடந்தது. ஈரோடு மேற்கு தொகுதியில் மனைவி இறந்த துயரத்திலும், அவருக்கு இறுதி சடங்குகளை செய்துவிட்டு முதியவர் ஒருவர் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்ட சம்பவம் நடந்து உள்ளது. அந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு பெரியசேமூர் மல்லிநகரை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 65). இவரது மனைவி வெள்ளையம்மா (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ராமதாஸ் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2 வாரமாக வெள்ளையம்மா உடல்நலம் சரியில்லாமல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 5-ந் தேதி இரவு இறந்தார்.
வாக்குப்பதிவு
நேற்று முன்தினம் கருங்கல்பாளையம் ஆத்மாவில் வெள்ளையம்மாவுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. அன்று தேர்தல் தினம் என்பதால், மனைவி இறந்த துயரத்திலும் தனது ஜனநாயக கடமையையாற்ற ராமதாஸ் தயங்கவில்லை.
அவர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். இது அவரது உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்