நெய்வேலியில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

நெய்வேலியில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறித்து சென்ற மா்மநபா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

Update: 2021-04-08 15:07 GMT
நெய்வேலி, 

நெய்வேலி 5-வது வட்டத்தை சேர்ந்தவர் சவுரியம்மாள் (வயது 60). சம்பவத்தன்று இவர் வட்டம் 10-ல் உள்ள ராமலிங்க அடிகளார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென சவுரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்தனர்.

இதில் திடுக்கிட்ட அவர், திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சவுரியம்மாளின் மகன் ஜான் பால்ராஜ்(40) நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெண்ணிடம் 8 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்