கெலமங்கலம் அருகே ரூ.12 லட்சம் உருளைக்கிழங்கு, பூண்டு தீயில் எரிந்து நாசம்
கெலமங்கலம் அருகே ரூ.12 லட்சம் உருளைக்கிழங்கு, பூண்டு தீயில் எரிந்து நாசம் ஆனது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா கெலமங்கலம் அருகே சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி லோகநாதன். இவரது நிலத்தில் விளைந்த பூண்டு மற்றும் உருளைக்கிழங்கை அறுவடை செய்து அவரது நிலத்திலேயே கீத்து கொட்டகை அமைத்து அதில் வைத்திருந்தார்.
விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் இருந்தபோது நிலத்தின் அருகே எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீ திடீரென கீத்து கொட்டகையின் மீது விழுந்து மளமளவென பரவி உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு எரிந்து நாசமானது.
இதுபற்றி தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு எரிந்து நாசம் ஆனதாக கூறப்படுகிறது.