ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1¾ கோடி பறிமுதல்

சட்டமன்ற தேர்தலின் போது உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1¾ கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-04-08 21:22 GMT
திண்டுக்கல்: 

பணம் கொடுப்பதை தடுக்க...
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதற்காக உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.

இதையொட்டி போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 32 பறக்கும் படைகள், 24 நிலையான கூர்ந்தாய்வுக்குழுக்கள், 16 வீடியோக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 

இந்த குழுவினர் தேர்தல் நாள் வரை வாகன தணிக்கை, ரோந்து ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டனர். 

அப்போது ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்ற பலர் சிக்கினர்.

ரூ.1¾ கோடி பறிமுதல் 
அதில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட பணம், வியாபாரிகள் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக எடுத்து சென்ற பணம் உள்ளிட்டவை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

அந்தவகையில் கடந்த 6-ந்தேதி வரை மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சத்து 42 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரசீது வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே, அவர்கள் உரிய ஆவணத்தை சமர்ப்பித்தால் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்