பவானிசாகர் வனப்பகுதியில் தண்ணீர் தேடி அடிக்கடி ரோட்டை கடக்கும் யானை-சிறுத்தைகள்; வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வனத்துறை வேண்டுகோள்

பவானிசாகர் வனப்பகுதியில் தண்ணீர் தேடி அடிக்கடி யானை மற்றும் சிறுத்தைகள் ரோட்டை கடப்பதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-04-08 21:42 GMT
பவானிசாகர்
பவானிசாகர் வனப்பகுதியில் தண்ணீர் தேடி அடிக்கடி யானை மற்றும் சிறுத்தைகள் ரோட்டை கடப்பதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் கிருபா சங்கர் கூறியதாவது:-
வனவிலங்குகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் கருகி காணப்படுகின்றன.
இதனால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் குட்டைகளில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள்
இதைத்தொடர்ந்து வனவிலங்குகள் இந்த குட்டைகளில் தண்ணீர் குடிப்பதற்காக அவ்வப்போது சாலைகளை கடந்து செல்லும். இதனால் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் வனப்பகுதியில் குறிப்பாக சத்தியமங்கலம், பண்ணாரி வனப்பகுதி வழியாக செல்லும் சாலைகளிலும், பவானிசாகரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையிலும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் 20 கிலோ மீட்டர் வேகத்துக்கு உட்பட்டு செல்லவேண்டும். வேகமாக சென்று வனவிலங்குகளின் உடல், உயிருக்கு தீங்கு விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்