மொடக்குறிச்சி அருகே துணிகரம்: மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் கொள்ளை

மொடக்குறிச்சி அருகே துணிகரமாக மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-04-08 21:43 GMT
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர், மண்கரடு வித்யா நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). இவர் கணபதிபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். சண்முகம் சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்குள்ள பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்தை காணவில்லை. உடனே இதுகுறித்து சண்முகம் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இதில், நேற்று முன்தினம் மதியம் சண்முகம் வீட்டு முன்பு ஒரு கார் வந்து நின்றுள்ளது. பின்னர் அந்த காரில் இருந்து வேட்டி-சட்டை அணிந்த நபர்கள் 3 பேர் இறங்கி, சண்முகத்தின் வீட்டு உள்ளே சென்றதை பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
வீட்டில் யாரும் இல்லாததை மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மர்மநபர்கள் காரில் வந்து சண்முகத்தின் வீட்டு கதவின் பூட்டை கடப்பாரையால் நெம்பி திறந்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதை திறந்து ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்தை திருடிவிட்டு காரில் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்