கொரோனா பரவலால் புதிய கட்டுப்பாடுகள்: அரசு பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவலால் புதிய கட்டுப்பாடு காரணமாக அரசு பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-04-08 22:45 GMT
சேலம்:
தமிழகத்தில் கொரோனா பரவலால் புதிய கட்டுப்பாடு காரணமாக அரசு பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு நேற்று அறிவித்துள்ளது. பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது என்றும், பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், அரசு பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:-
முககவசம்
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பஸ்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. டிரைவர், கண்டக்டர் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். 
மேலும், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பஸ்களில் சானிடைசர் வைக்கப்பட்டிருக்கும். அதை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம். அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை பின்பற்றி பயணம் மேற்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்