ஆன்லைனில் வாங்கிய பொம்மை துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர்

மணலி ஆண்டார்குப்பம் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வந்த வடமாநில தொழிலாளர்களை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துவிட்டு தப்பி ஓடமுயன்றார்.

Update: 2021-04-09 04:27 GMT

அப்போது அங்கு ரோந்து வந்த மணலி புதுநகர் போலீசார், அந்த மர்மநபரை மடக்கிப்பிடித்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர், மணலி காமராஜர் நகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 21) என்பதும், தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்ததும் தெரிந்தது. மேலும் அவரிடம் பறிமுதல் செய்தது பொம்மை துப்பாக்கி என்பதும் தெரியவந்தது.

விக்னேஷ், ஆன்-லைனில் அந்த பொம்மை துப்பாக்கியை வாங்கி உள்ளார். பின்னர் அதை வைத்து வடமாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து விக்னேசை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகள்