அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே மோதல்

திருமயம் அருகே விராச்சிலையில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2021-04-09 20:37 GMT
திருமயம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கும், அவரது உறவினரும் அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை கிடையாது.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவரவர் கட்சிக்கு இருவரும் தேர்தல் பணியாற்றினர்.  இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் விராச்சிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களது ஆதரவாளர்களான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வினர் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில், ஒரு சிலர் காயமடைந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இந்த தாக்குதல் சம்பவம் குறித்த புகாரின்பேரில் தி.மு.க. தரப்பைச் சேர்ந்த 22 பேர் மீது பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்