ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும்- மாநகராட்சி ஆணையாளரிடம் மனு

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும் எனக்கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் வணிகர்கள் மனு அளித்தனர்.

Update: 2021-04-09 22:45 GMT
ஈரோடு
ஈரோடு வீரப்பன்சத்திரம் அனைத்து வணிகர்கள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் நடைபெற்று வருகிறது. இதைப்போல் வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் ரோட்டில் குழாய் அமைப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. அந்த ரோடு தற்போது வரை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்லும் போது அதிக அளவில் புழுதி காற்றில் பறப்பதால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக அந்த ரோட்டை சீரமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
முன்னதாக ரோட்டை சீரமைத்து தர வலியுறுத்தி இனிப்பு வழங்கி நூதன முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த போராட்டம் கைவிடப்பட்டு மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்