ஆத்தூரில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆத்தூரில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-10 13:01 GMT
ஆறுமுகநேரி:
ஆத்தூரில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பட்டதாரி வாலிபர்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குளத்துக்கரை தெருவைச் சேர்ந்தவர் அஜித் பாட்ஷா மனைவி நஜிமா பேகம் (வயது 26). இவர்களுடன் நஜிமா பேகம் அண்ணன் ஷேக் அப்துல் பரித் (28) வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பி.ஏ.பட்டதாரியான இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், இதனால் அவரால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஷேக் அப்துல் பரித்துக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். தன்னால் தான் தனது சகோதரர்களுக்கு திருமணம் தள்ளிப்போகிறது என்று ஷேக் அப்துல் பரித் மனவேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. 

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் வீட்டிற்கு ஷேக் அப்துல் பரித் வந்தார். அப்போது, வீட்டிற்குள் சென்று அவர் உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார். பின்னர் நஜிமா பேகம் கதவை திறக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மினிவிசிறியில் ஷேக் அப்துல் பரித் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டு இருந்தார்.

உடனே அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள்,  ஷேக் அப்துல் பரித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து ஆத்தூர் போலீசில் நஜிமா பேகம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்