சேலத்தில் ரவுடியை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

சேலத்தில் ரவுடியை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-11 22:29 GMT
சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டையை அடுத்த வீராணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்சல். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் இவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீனில் ரவுடி அப்சல் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு பொன்னம்மாபேட்டை திப்பு நகர் பகுதியில் அவர், மது போதையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அப்பகுதியில் நின்றிருந்த பெண்களை பார்த்து கேலி, கிண்டல் செய்து ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ரவுடியை கண்டித்து பொன்னம்மாபேட்டை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதேநேரத்தில் ரவுடி அப்சல் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அம்மாபேட்டை போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்