மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது: செவிலியர் பலி; கணவர் படுகாயம் டிரைவர் கைது

முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி ேமாதியதில் செவிலியர் உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2021-04-13 12:13 GMT
முத்துப்பேட்டை, 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கீழபெருமழை கிராமத்தை சேர்ந்தவர் வைரவமூர்த்தி(வயது39). இவர் எடையூர் மாங்குடி சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி நதியா (31). இவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை வைரவமூர்த்தி தனது மனைவி நதியாவுடன் மோட்டார் சைக்கிளில்திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது வாண்டையார் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது முத்துப்பேட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக வைரவமூர்த்தி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி படுகாயமடைந்த நதியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டிரைவர் கைது

வைரவமூர்த்தி படுகாயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எடையூர் போலீசார் நதியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் காைரக்காலை சேர்ந்த டிரைவர் முருகனை(45) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்