61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; காரைக்காலில் 11 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

புதுவையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று தொடங்கியது. காரைக்காலில் 11 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2021-04-15 11:00 GMT
தடைக்காலம்
கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி ஏப்ரல், மே மாதம் மீன்களின் இனப் பெருக்க காலமாகும். இந்த காலத்தில் மீன்களை பிடித்தால், அவற்றின் வயிற்றில் உள்ள சினை (முட்டை) அழிக்கப்பட்டு இனப்பெருக்கம் பாதிக்கப்படும்.இந்தநிலையில் மீன் வளத்தை பாதுகாக்கவும், மீன் இனப்பெருக்கத்திற்காகவும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தடைகாலம் இன்று (வியாழக் கிழமை) தொடங்குகிறது.காரைக்கால் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 
இருந்து 420 விசைப்படகில் இருந்து சுமார் 11 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். மீன் பிடி தடை காலத்தையொட்டி இன்று (வியாழக்கிழமை) காலை முதல் அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

படகு பழுதுபார்ப்பு
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும், நேற்று மாலை கரைக்கு திரும்பினர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்பிடி துறைமுகம் மற்றும் அரசலாற்றங் கரையில் விசைப்படகுகள் வரிசையாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சில மீனவர்கள் மட்டும் பைபர் படகுகளில் குறைந்த தூரம் மட்டுமே சென்று மீன் பிடிக்கின்றனர். இந்த மீன்பிடி தடைகாலத்தில், பெரும்பாலான மீனவர்கள் தங்கள் படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை பழுதுபார்ப் பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

நிவாரணம்
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் குறைந்த அளவிலான தொகையை வழங்கி வருகிறது. விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு, இந்த தொகையை இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். படகு பழுதுபார்ப்பு தொகை, டீசல் மானியத்தொகை போன்றவற்றை தடைக் காலம் அமலில் இருக்கும் போதே வழங்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்