மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.
மன்னார்குடி,
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்தை கடந்து கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வராத சூழலில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி தட்டுப்பாடு
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று முன்தினம் வரை தடுப்பூசி் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததால் தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு வந்த ஏராளமானோர் ஊசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மீண்டும் தொடங்கியது
இந்த நிலையில் தடுப்பூசி வந்துள்ளதால் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி மீதானபயம் நீங்கி பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசியை போட்டு செல்கின்றனர்.