மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து வயதான தாயை முட்புதரில் வீசி சென்ற மகன்

வயதான தாயை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த மகன் முட்புதரில் வீசி சென்றார்.

Update: 2021-04-17 04:31 GMT
பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. இந்த முட்புதரில் பெண்ணின் அழுகுரல் சத்தம் கேட்டது. அந்த பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தபோது 2 கால்கள் செயலிழந்த மூதாட்டியை யாரோ முட்புதரில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

பொதுமக்கள் அவரை மீட்டு பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சென்னை மணலி பெரியசேக்காடு கிராமத்தை சேர்ந்த காந்திமதி (வயது 85) என்பது தெரியவந்தது. மூத்த மகன் ரவி. கொத்தனார் வேலை செய்கிறார். 2-வது மகன் சங்கர். அருள் வாக்கு சொல்லக்கூடியவர்.

காந்திமதியை அவரது 2-வது மகன் சங்கர் ஏமாற்றி வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து முட்புதரில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.

பெற்ற மகனே வயதான கால்கள் செயலிழந்த தாயை கொஞ்சமும் இரக்கமில்லாமல் செய்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட சங்கரை கைது செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் செய்திகள்