கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 147 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

Update: 2021-04-21 16:40 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 147 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பெங்களூரு, ஆந்திரா, கோவா, மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய இடங்களில் இருந்து குமராட்சி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை வந்த 7 பேருக்கும், சென்னை, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து 8 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்த 2 பேர், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 57 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 73 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 138 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 306 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 163 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை 308 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், நேற்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

3 பேர் பலி

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 68 வயது முதியவர், சிதம்பரத்தை சேர்ந்த 54 வயது பெண் ஆகிய 2 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 64 வயது மூதாட்டி கடலூர் அரசு மருத்துவமனையிலும் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் 3 பேரும் பலியானார்கள். இதன் மூலம் பலி எண்ணிக்கை 311 ஆக உயர்ந்தது. கொரோனா பாதித்த 909 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 449 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 272 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்