மொபட்டில் மணல் மூட்டைகள் கடத்திய 2 பேர் மீது வழக்கு

மொபட்டில் மணல் மூட்டைகள் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-24 22:18 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராம நிர்வாக அதிகாரி தினேஷ் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அண்ணங்காரம்பேட்டை பகுதியில் மொபட்டில் 2 பேர் மணல் மூட்டைகளை வைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மொபட்டை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரிக்க முயன்றபோது, மணல் மூட்டைகளுடன் மொபட்டை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அதிகாரி நடத்திய விசாரணையில் அவர்கள் கோடாலிகருப்பூர் காலனி தெருவை சேர்ந்த சேகர் மகன் ஸ்ரீராம்(வயது 21) மற்றும் தென்கச்சி பெருமாள் நத்தம் காலனி தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் அறிவழகன்(21) என்பதும், அவர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி தினேஷ், தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மொபட் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்