குன்னம் அருகே வயதான தம்பதி விஷம் குடித்தனர்

வயதான தம்பதி விஷம் குடித்தனர்

Update: 2021-04-28 19:32 GMT
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளத்தூர் கிராமம் காலனி தெரு பகுதியை சேர்ந்தவர் நடேசன்(வயது 87).விவசாயி. இவரது மனைவி செல்லம்மாள்(71). இந்த தம்பதிக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். திருமணமான அவர்களில் 3 பேர் சென்னையிலும் 3 பேர் உள்ளூரிலும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். வயது முதிர்வின் காரணமாக நடேசன்-செல்லம்மாள் தம்பதியினர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். மேலும் தங்களது அருகில் இருந்து கவனித்துக் கொள்ள யாரும் இல்லையே என்று மனக்குமுறலும் அவர்களிடையே இருந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் நேற்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தனர்.இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்லம்மாள் உயிரிழந்தார். நடேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்