மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

சின்னதாராபுரம் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தபோது மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

Update: 2021-04-29 18:37 GMT
க.பரமத்தி
திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக...
கோவை மாவட்டம், காளப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் மனைவி மகேஸ்வரி (55), மும்பையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றிய மகன் பிரதீப்(33), மருமகள் பிரதிபா(31) ஆகியோருடன் தனது 2-வது மகன் வெங்கடேஷ் என்கிற கார்த்தி என்பவருக்கான திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்று கோவையில் இருந்து ஒரு காரில் கரூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.
 பின்னர், திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து விட்டு மீண்டும் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை பிரதீப் ஓட்டினார். கார் சின்னதாராபுரம் அருகே உள்ள சூடாமணி என்னும் இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் பயங்கரமாக மோதியது. 
3 பேர் சாவு
இதில், இடுபாடுகளுக்கு இடையே சிக்கி 4 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்டதும் அருகில் இருந்தவர்களும், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் ஓடிவந்து அவர்களை மீட்டு 2 தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆறுமுகம், பிரதீப் ஆகியோர் இறந்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பிரதிபா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்ற நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்