அரவக்குறிச்சி அருகே கடப்பாரையால் அடித்து தாய் கொலை மகன் கைது

அரவக்குறிச்சி அருகே கடப்பாரையால் அடித்து தாய் கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-04-29 18:40 GMT
அரவக்குறிச்சி
மதுபோதையில் தகராறு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஜங்கால்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முத்துராஜ்(வயது 35). கூலித்தொழிலாளி. திருமணமான இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர். அவருடைய தாய் பழனியம்மாளும் முத்துராஜுடன் சேர்ந்து வசித்து வந்தார். முத்துராஜுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. 
வழக்கம்போல நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்ற முத்துராஜ் அன்று இரவு மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்தார். இதனை அவரது தாய் பழனியம்மாள் கண்டித்தார். 
கடப்பாரையால் அடித்துக் கொலை
 இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் வீட்டில் உள்ள கடப்பாரையை எடுத்து வந்து தாய் என்றும் பாராமல் பழனியம்மாள் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்து அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபோதையில் தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்